'நீங்க என்னோட எரக்கமில்ல....'

அந்த அலுவலகம் சுறுசுறுப்பாக இயங்குகிறது. தொலைபேசியும், மொபைல் போன்களும் சிணுங்கிக் கொண்டிருக்கின்றன. ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் ஆங்காங்கே காரசாரமாக உரையாடல்களும், வியாபாரப் பேச்சுக்களும். ரிஹாம் கம்பூட்டரிலும், தொலைபேசியிலும் பம்பரமாக சுழல்கிறான். 

நின்று வீண் அரட்டை அடிப்பதற்கு நேரமே இல்லை. அதனால்தானோ என்னவோ, இது போன்ற முதல்தரக் கம்பனிகளை விஞ்சுவதற்கு நாட்டின் மற்ற நிறுவனங்களால் இயலவில்லை.  இங்கெல்லாம், ஒரு சிறு தவறும் செய்ய முடியாதளவு இருக்கமாக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது கம்பனியின் உள்ளகக் கட்டமைப்பு. வெளியில் இருப்பவர்களுக்கு இது சுவர்க்க பூமி. யதார்த்தத்தில் அவை உலகிலேயே சமைக்கப்பட்ட நரகங்கள். கௌரவான சிறைக் கூடங்கள்.

ரிஹாம் அந்தக் கதிரையில் உட்கார்ந்தால், எட்டு முப்பதில் இருந்து ஐந்து மணி வரை, ஒரு நாள் எப்படி ஓடி முடிகிறது என்பதே விளங்காது. பகல் சாப்பிடவும், லுஹர் தொழவும் மறந்த சந்தர்ப்பங்கள் அநேகம். 

எவ்வளவோ சிரமப்பட்டு இந்த இடத்திற்கு வந்திருக்கிறான். ஜயவர்தனபுறப் பல்கலைக்கழகத்தில் நான்கைந்து வருடங்கள். சீமா, சிம் என்று கிட்டத்தட்ட ஒரு பத்து லட்சம் ரூபாய். கம்பனியில் சேர்ந்து இன்டர்ன்ஷிப் என்று ஒரு வருடம், புருபோஷனரி என்று இன்னும் ஒரு வருடம். இந்தக் காலத்தில் எல்லாம் அவனுக்குக் கிடைத்தது வெறும் நான்காயிரம், எட்டாயிரம் 'அலவன்ஸ்' மாத்திரமே.

அதன் பிறகு இன்னும் சில வருடங்கள் தொழில்புரிந்து அஸ்ஸிஸ்டன் மனேஜரான போது முப்பது வயதாகி விட்டது.  கடந்த நான்கு மாதத்திற்கு முன்புதான் திருமணம் செய்திருந்தான்.

ரிஹாமின் தனிப்பட்ட கைத்தொலைபேசி மனைவி ஸம்ரினாவின் பெயரைக் கூறிக் கொண்டு அலரியது. அவனது முகத்தில் சுருக்கக் கோடுகள் விழுந்தன. சிந்தனை ரேகை படர்ந்தது. போனை சைலன்ஸ் மோடிற்கு மாற்றியவனுக்கு, சிறுநேரம் எதுவும் ஓடவில்லை. மேசையில் வைக்கப்பட்டிருந்த போத்தலை எடுத்து, சில மிடருத் தண்ணீர் அருந்தினான். பரபரப்பு மிகுந்த கம்பனிச் சூழல் அவன் அந்நினைவைத் தற்காலிகமாக மறந்து விட உதவியது.

                                                         ****
அன்று வேளைகள் முடிந்து, ஒபிஸில் இருந்து வெளியாகும் போது நேரம் ஐந்து முப்பதாகி விட்டிருந்தது. காரில் ஏறி, போக்குவரத்து நெரிசலைச் சமாளித்து, தனது மருதானை அனக்ஸை அடைந்த போது கடிகாரம் ஐந்து ஐம்பதைக் காட்டியது. அவனுடன் தங்கியிருக்கும் மற்ற நண்பர்கள் இருவரும் இன்னும் வந்து சேர்ந்திருக்கவில்லை. அவசர, அவசரமாக வுழு செய்து அஸர் தொழுதான். தேனீர் தயாரித்துக் குடித்தான்.

தேனீர் உடம்புக்கு உட்சாகத்தைத் தந்தாலும், மனதுக்குத் தரவில்லை. மனது இன்னும் வெறுமையாகவே இருந்தது. இப்போதுதான் தனது கைத்தொலைபேசியை எடுத்துப் பார்த்தான். ஸம்ரினாவிடம் இருந்து இருத்தைந்து மிஸ்கோல்களும், முப்பத்தாறு எஸ்.எம்.எஸ்களும் இருந்தன.

'நீங்க என்னோட எரக்கமே இல்லை'
'ஒங்களுக்கு மனசு என்ட ஒன்டே இல்லயா? ஒங்கட வைப் இவ்ளோ ஆசயா மோல்டீவ்ஸ் போமான்டு கேக்குறா? சரி, போவோம் செல்லம் என்டு ஒங்களுக்குச் சொல்ல ஏலாம இருக்குதே.'
'போங்க, இதுக்குப் பொறவ் ஒங்களோட பேச மாட்டேன். ஏன்ட தலயெழுத்து ஒங்கள கல்யாணம் பண்ணினது'. இதனோடு சேர்த்து அவனைக் கீறிக் கிழிக்கும் மற்றும் சில எஸ்.எம்.எஸ்கள். இதயம் வலித்தது.   

தனிமையில் அவனை சமாதானம் செய்ய யாரும் இல்லை. தொலைக் காட்சியும் அவனது மனதின் கவனத்தை வேறு பக்கம் திருப்புவதற்கு உதவவில்லை. கவலை கோபமாக இப்போது மாறியது. தனது பெற்றோர் மீதும் அவனுக்கு ஆத்தரம், ஆத்திரமாய் வந்தது.

கம்பஸில் ஜூனியர் பட்ச் அப்ராவையோ, ஹப்ஸாவையோ திருமணம் செய்திருக்கலாம். எளிமையான, ஒழுக்கமான பிள்ளைகள். அவர்களது வீட்டில் இருந்து, வரண்கள் வந்தாலும், அவர்களது வசதியின்மையைக் கருத்தில் கொண்டு, ரிஹாமின் பெற்றோர் விரும்பவில்லை. பாடசாலைக் காலத்தில் இருந்தே புத்தகப் பூச்சாக இருந்த ரிஹாமும் அது பற்றிப் பெரிதாக யோசிக்கவில்லை.    

காலம் போனது. கடைசியில்தான் ஸம்ரினாவின் வரண் வந்தது. பெரிய பணக்காரக் குடும்பம். மனதைக் கொள்ளை கொள்ளும் அழகு வேறு. ரிஹாமும் நாட்டின் முன்னணிக் கம்பனியொன்றில் அஸ்ஸிஸ்டன்ட் மனேஜர் என்பதால், இருவருக்கும் இடையே இருந்த பதினொரு வருட வயது வித்தியாசத்தை இரு குடும்பங்களும் பெரிதுபடுத்தவில்லை. ஊருக்கே ஒரு திருவிழாவாக ரிஹாம்- ஸம்ரினா திருமணத்தை நடாத்தி முடித்தார் ஸம்ரினாவின் தந்தை. இரண்டு தட்டு ஆடம்பர வீடொன்றும், காரொன்றும், ஐம்பது பவுன் நகையும் சீதனமாக வழங்க அவர் முன்வந்த போது, சாதாரண ஆசிரியர் ஒருவரின் மகனான ரிஹாம் திக்கு முக்காடித்தான் போனான். 

திருமணம் முடித்து முதல் இரு வாரங்கள் சந்தோசமாகவே கழிந்தன. அதன் பிறகே பிரச்சினைகள் தலைதூக்கத் துவங்கின. தான் ஒரு முக்கிய பதவியில் இருந்தாலும் கூட, தனது தற்போதைய வருமானத்தில் குடும்பத்தை ஓட்டிச் செல்ல முடியாது என்ற விடயத்தை இந்த நான்கு மாத காலத்தில் ரிஹாம் நன்றாகவே புரிந்து கொண்டிருந்தான்.  

கொழும்பில் தங்கியிருப்பதால் அவனுக்கு இருக்கின்ற செலவு, அவன் பெரிய பதவியொன்றில் இருப்பதால், பெரிய மட்டத்தில் இருப்போருடன் உறவைப் பேணுவதற்கு அவன் மேற்கொள்ள வேண்டியுள்ள செலவுகள் போக ஒரு எழுபத்தைந்து வீதமே குடும்பத்திற்கு என்று மிஞ்சும். அதில் தனது பெற்றோரைப் பார்க்க வேண்டும். இருக்கின்ற ஒன்றிரண்டு பழைய கடன்களை அடைக்க வேண்டும். இரண்டு சகோதரிகளுக்கும் திருமணம் செய்து கொடுக்க வேண்டும். அதற்கு முன் தனது சொந்த வீட்டைப் பழுது பார்க்க வேண்டும்.
  
இதற்கு மத்தியில், இப்போது சில நாட்கள் மாலைத்தீவிற்கு ட்ரிப் போக வேண்டும் என்று ரிஹாமை நச்சரித்துக் கொண்டிருந்தாள் ஸம்ரினா. அவளது நண்பியொருத்தி, ஹொனிமூன் மேல்டிவ்ஸ் போய் வந்தாளாம். ஒபிஸ் நேரங்களிலும் கோல் பண்ணி இது பற்றித் தொல்லை தரத்துவங்கினாள். தற்போது ரிஹாமின் பொருளாதார நிலையில் இதுவொரு பெரும் தலையிடியாகப் போய் விட்டது. 

வறுமையையே தெரியாமல் வளர்ந்த அவளுக்கு, தனது பொருளாதார நிலையைப் புரிய வைக்க எடுத்த எல்லா முயற்சிகளும் தோற்றுப் போய் விட்டன. போதாக்குறைக்கு வயதாலும் அவள் முதிர்ச்சி அடைந்த ஒருத்தி இல்லையே? ரிஹாமை அவள் புரிந்து கொள்ளவில்லை என்பதோடு, தன்னுடன் ரிஹாம் இரக்கமின்றி நடந்து கொள்வதாகவும் அவள் நினைத்தாள்.

மெத்தையில் சாய்ந்திருந்த ரிஹாமின் சிந்தனை அலைகள் பல்வேறு இடங்களையும் சுற்றி வந்தன. இறுதியில் தன் கைத்தொலைபேசியைச் சுழற்றினான்.

                                                           *******
வெள்ளிக்கிழமை மாலை முக்கியமானதொரு பார்ட்டி இருந்ததால், சனிக்கிழமை சுபஹோடுதான் கொழும்பில் இருந்து ஊருக்குக் கிளம்பினான் ரிஹாம். கடுகன்னாவையால் வந்து கொண்டிருக்கும் போது தொலைபேசி அலரியது. மறுமுனையில் மாமனாரின் குரல். 'மகன், நான் ஏன்ட புத்தள பெக்டரிய நாளண்டக்கி தொறக்குற. மகள கூட்டிண்டு வாங்களே!'. 

திங்கட் கிழமை அவன் லீவ் எடுத்துக் கொண்டு புத்தளம் போக வேண்டும். இப்படித்தான் கிழமைக்கொரு தடவை திட்டமிடாத பிரயாணங்கள் வருகிறது. அவன் ஒரு அஸ்ஸிஸ்டன்ட் மனேஜர். நினைத்தவாறெல்லாம் லீவ் எடுக்க முடியாது. தவிரவும், புத்தளம் போய் வருவதென்றால் பெட்ரோல் செலவு மட்டும் குறைந்தது மூவாயிரம் ரூபாயாவது போய்விடும். ஸம்ரினாவக் கூட்டிக்கொண்டு போனால் ரெஸ்டூரண்ட், ஷொப்பிங்க் மோல் என்று ஏறி இறங்க வேண்டி வரும். கடைசியில் எவ்வளவு பில் வரும் என்று அல்லாஹ்வுக்கு மட்டும்தான் தெரியும். எல்லாம் அவ வாப்பா பழக்கின பழக்கம். 

லீவ் இல்லாததால், வர இயலாது என்று மாமாவிடம் சொல்லிட முடியும் என்றாலும், ஸம்ரினா விடுவாளா?

                                                                 *****
வீடு வந்து சேர்கின்ற போது, மணி காலை ஒன்பதைத் தாண்டி விட்டது. ஸம்ரினா இன்னும் தூங்கிக் கொண்டிருந்தாள். ரிஹாம் வந்துதான் அவளை எழுப்ப வேண்டியிருந்தது. சோம்பல் முறித்துக் கொண்டு எழுந்து, தேனீர் தயார் செய்து கொடுத்தாள். ஒரு கிழமைக்குப் பிறகு கொழும்பில் இருந்து வந்திருக்குறானே, குளித்துக் கொஞ்சம் அலங்கரித்துக் கொள்வோமே என்ற நினைப்பின்றி, இன்னும் நைட் ட்ரெஸ்ஸிலேயே இருந்தாள். 'நாங்க மோல்டீவ்ஸ் போற தானே?' அவனது மடியில் வந்து உட்கார்ந்து ரிஹாமை முத்தமிட்டாள். இன்னும் பல் துளக்கிக் கூட இருக்க மாட்டாள். வாய் நாற்றம் அந்தளவு மோசமாக வீசியது.

ஸம்ரினாவின் கேள்விக்கு ரிஹாம் பதிலெதுவும் சொல்லாமல் மௌனமாக இருந்தான். அவனை அறியாமல் ஒரு பெருமூச்சு வெளிப்பட்டது. தான் சீதனம் எதுவும் எடுக்காமல், எளிமையான குடும்பம் ஒன்றில் பெண் எடுத்திருந்தால், தான் எவ்வளவோ நிம்மதியாக வாழ்ந்திருக்கலாம் போல் ரிஹாமிற்குத் தோன்றியது. அவனது உணர்வு ஸம்ரினாவிற்குப் புரிந்ததோ என்னவோ? 'நீங்க என்னோட எரக்கமில்ல' என்றாள். அவளது விழிகளில் நீர் நிறைந்திருந்தது.          
               
Share

0 comments:

Search

About Me

My photo
Kandy, Sri Lanka
Holds a Degree in Business Management and Reading for the Masters in Journalism & Mass Communication. I have nearly four years of experience in Service industry, out of which around two and half years as the Managing Editor in a Regional Newspaper.

Blogroll

Related Posts Plugin for WordPress, Blogger...